செல்போன் பதிவுகள் மூலம் அம்பலமாகப்போகும் கொடநாடு விவகாரம்!

செல்போன் பதிவுகள் மூலம் அம்பலமாகப்போகும் கொடநாடு விவகாரம்!

ஜான்.மரிய ஜோசப்,

 ஊட்டி, கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் 24.4.2017-ந் தேதி கொலை செய்யப்பட்டார். தொடர்ச்சியாக எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு நடைபெற்றுக் க்லொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது.

 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது.

 குறிப்பாக வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 இந்நிலையில், தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

 இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அப்படியிருக்க நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது.

   சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும்,சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆஜரானகினர்.  இந்நிலையில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்ற நிலையில் வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் அவர்கள் உத்தரவிட்டார்.