அரசு டீலக்ஸ் பேருந்துகளில் ஓட்டை ஒடிசல்!
ஜி.கே.சேகரன்,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் போக்குவரத்து மண்டல அலுவலகம் வேலூர், ரங்காபுரத்தில் இயங்குகின்றன.
தமிழக அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் டீலக்ஸ் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. அதில் பேருந்திற்கு உண்டான முதலுதவிப் பெட்டி அவசரகால கண்ணாடியை உடைக்கும் சுத்தியல் தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், பயணிகள் சாய்ந்த நிலையில் செல்லக்கூடிய இருக்கைகள் சரியான நிலையில் இல்லை.
ஆனால் பேருந்தின் வெளிப்புறத் தோற்றம் மக்களை கவரும் வகையில் டிஜிட்டல் பெயர் பலகைகள், வெளிப்புற தோற்றம் உள்ளிட்ட அம்சங்கள் மட்டுமே டீலக்ஸ் பேருந்து களில் இடம் பெற்று இருந்தன.
சாதாரண பேருந்தை காட்டிலும் டீலக்ஸ் பேருந்தில் மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை கட்டணங்கள் சற்று கூடுதலாகவே பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது.
வருமானத்திற்காக ஸ்டிக்கர்களை ஒட்டி டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் நெடுந்தூரம் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இருக்கைகள் பயணிகளுக்கு ஏற்றவாறு வசதியாக இல்லை.
இதனால் பொதுமக்களுக்கு முதுகு வலி, கை கால்கள் மரத்துப் போதல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. தற்போது வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இயக்கப்படும் இந்த அரசு டீலக்ஸ் பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே ஓட்டைகள் சீட்டுகள் சரியில்லாமல் கயிறு போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆட்டோ மெட்டிக் கதவு எனப்படும் தானியங்கி கதவுகள் கூட பெரும்பாலான அரசு டீலக்ஸ் பேருந்துகளில் பழுதாகி அவைகளை கயிறு போட்டு கட்டி வைத்துள்ள அவல நிலை கண் கூடாக காண முடிகிறது.
மேலும் முதலுதவி பெட்டிகளும் இல்லாமல் காலியாக ஓட்டையாக அந்த இடம் காட்சியளிக்கிறது கட்டணம் கொடுத்து மக்கள் பயணிக்கும் இது போன்ற டீலக்ஸ் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.
சரி பண்ணிடுவாங்கன்னு நம்பலாம்.