இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு:- விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு:- விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

        தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான திருக்கோவில்கள் அரசு துறை அதிகாரிகளாலும், சில கோவில்களில் அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

         ஒவ்வொரு திருக்கோவிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்ற ஐதீக முறைப்படி நடைபெற்று வருகின்றன. 

 கிராம கோவில்கள் முதல் மாநகர கோவில்கள் வரை பூசாரிகள் இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கி கிராமத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு ஒரு கால பூஜை நடைபெறுவதற்கும் வழிவகை செய்துள்ளது.

                அப்படியிருக்க, விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கவனிக்கப்படாமல் உள்ளது.

  இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தனது வேண்டுதல்களை நிறைவேற வேண்டும் என்றும், நிறைவேறியவர்கள் அதற்கு நன்றிக் கடனை செலுத்த வருகின்றனர்.

     இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அவ்வப்போது அறநிலையத்துறைக்கு புகார்களும் செல்கின்றன. குறிப்பாக அம்மனுக்கு செலுத்தப்படும் மாலைகள் சுழற்சி முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், தனிப்பட்ட சிலர் சர்வாதிகாரம் செய்வதாகும் கூறப்படுகிறது.

     கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கும் கடமை அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உண்டு என்பதை மறந்து செயல்படுவது ஏன்? என்று பக்தர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

         கோவிலுக்குச் செல்லும் வழித்தடங்களில் குறிப்பிட்ட தூரம் வரை சென்று வருவதற்கான சாலைகள் வசதிகள் படும் மோசமாக உள்ளன. புனிதமான இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்ய செல்லும் வழித்தடங்களில் பல இடங்களில் கழிவுநீர்கள் காட்சிப் பொருளாக இருந்து வருவது மட்டுமின்றி, பாதசாரிகளின்; நடைபாதையிலும் சாக்கடை நீர் ஆறாக ஓடுகின்றன. 

            இருக்கன்குடி அரசு அதிகாரிகள் பக்தர்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்து கழிவுநீர் கால்வாய் வழித்தடத்தை சீர் செய்து, புனிதமான ஆலயத்தின் பெருமையை அகில உலகமெங்கும் கொண்டு செல்ல முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

                தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா துறையும் வளர்ச்சியடைய வேண்டும். நாட்டு மக்கள் நன்மையடைய வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இவ்விசயத்தில் கவனம் செலுத்தி முதல்வருக்கு பெருமை சேர்ப்பாரா? பொருத்திருந்து பார்ப்போம்.