திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியும் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் விசாரிக்கப்படுகிறார்!

ம.பா.கெஜராஜ்,
பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவியிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பி.எஸ்.பி. மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32), அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
அப்படியிருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் செல்போனில் பேசி இருந்ததாகவும் தகவல் வெளியானது.
நெல்சன் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.