குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்!

கு.அசோக்,
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் முறையாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடத்துடன் ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து ஆற்காடு நகர காவல் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் உங்களுக்கு நாளைக்குள் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.