பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை.! முன்னாள் சிறப்பு டிஜிபி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை.! முன்னாள் சிறப்பு டிஜிபி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

உ.சசிகுமார்,

 தமிழ்நாட்டில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது சிறப்பு டிஜிபியாக பதவியில் இருந்தவர் ராஜேஷ் தாஸ்.

 அப்போது முதல்வர் சுற்றுப்பயணம் செல்லும் போது  பெண் எஸ்பி அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அதே போல் சிறப்பு டிஜிபி ராஜேசும் பணியில் இருந்தார். அப்போது அவர் பெண் அதிகாரியை தனது காரில் அழைத்துச்சென்றார். அபோது அந்த பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

 ராஜேஷ் தாசுக்கு உதவியதாக செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து   டிஜிபி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரியை மிரட்டிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். 

 இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

 இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் ஜனவரி 6ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. 

   இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.

 தண்டனையிலிருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என்று கணக்கு போடும் ராஜேஸ் தாசுக்கு நீதிமன்றம் தகுந்த தீர்ப்புகளை வழங்கிவருகிறது.  இது  ராஜேஸ் தாஸ் போன்ற செக்ஸ் டார்ச்சர் அதிகாரிகளுக்கு பாடமாக அமையும்.