வேளாங்கண்ணி வரை மின் ரயில் பயணம்! திருவிழாவையொட்டி நற்செய்தி! பக்தர்கள் மகிழ்ச்சி!

வேளாங்கண்ணி வரை மின் ரயில் பயணம்! திருவிழாவையொட்டி நற்செய்தி! பக்தர்கள் மகிழ்ச்சி!

இளங்கோவன்,

 வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிற நிலையில், ரயில் பாதை திறக்கப்பட்டது, 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

  ஆனால், கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது.

 தற்போது கொரோனா தொற்று இல்லாத சூழலில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது.   அப்படியிருக்க இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது. சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி  இரண்டு முறை சோதனை செய்தனர்.   எனவே, நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

   வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த வரேவேற்பை பெற்றுள்ளது.