தந்தை முலாயம் சிங்கை விஞ்சிய கூல் அகிலேஷ்! 2024 தேர்தலில் டமால் டுமில்!

ம.பா.கெஜராஜ்,
பாஜக வின் உத்தரபிரதேச வெற்றியானது, வேண்டுமானால் ஆட்சி அமைக்க ஏற்றதாக இருக்கலாம், ஆனால் அகிலேஷ் யாதவுக்கு இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது. 2017 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 70 இடங்களை அக்கட்சி கைப்பற்றி இருப்பதே அதற்கு காரணம்.
அதுமட்டுமல்ல அக்கட்சியின் வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் முக்கியத்துவத்தை உயர்த்தி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அகிலேஷ் யாதவ் இம்முறை பெற்றுள்ள வாக்கு சதவீதமானது, அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் பெற்ற வாக்கு விகிதத்தை விட அதிகம். 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமாஜ்வாடி கட்சி 1993 சட்டப்பேரவைத் தேர்தலில் 17% வாக்குகளை பெற்றது. 1996 தேர்தலில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடியின் வாக்கு விகிதம் 21.8% ஆக உயர்ந்தது.
2002 தேர்தலில் 25.37% ஆகவும், 2007 தேர்தலில் 25.43% ஆகவும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்தது. பின்னர் 2012 தேர்தலில் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் போட்டியிட்ட சமாஜ்வாடி 29.15 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது. இளம் வயதில் முதலமைச்சரானார் அகிலேஷ் யாதவ்.
அதன் பிறகு தந்தை முலாயம் சிங் உடனான மோதல் மற்றும் உட்கட்சிப்பூசல் காரணமாக 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த அகிலேஷ் யாதவ், வாக்கு சதவீதத்தையும் 21.82% என்ற அளவில் இழந்தார்.
இருந்த போதும் அகிலேஷ் யாதவ் கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். மாயாவதியுடன் இணக்கமாக இருந்து அரசியல் செய்து பார்த்தார். சில சமயங்களில் காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டார். சிறிய கட்சியான தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்தார். அதன் பின்னர் பாஜகவின் பாணியை பின்பற்றி அவர் சாதி கூட்டணி அமைத்தார்.மத அமைப்புகளோடும், மடங்களோடும், சாமியார்களோடும், உயர்சாதியினரோடும் இணக்கமாக இருந்து அவர்கள் ஆதரவோடு வட மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி வந்த பாஜகவின் பாணியை கையில் எடுத்தார் அகிலேஷ்.
இதுதான் சமாஜ்வாடிக்கு இத்தேர்தலில் பெரும் வாக்கு சதவீதத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
உபியில் பெரும்பான்மையாக வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவர் குறி வைத்தார்.. அதன் விளைவாகவே பாஜகவில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாடிக்கு தாவினர்.
அதன் விளைவு, நடந்து முடிந்த தேர்தலில் 36.1% என்ற பெரும் வாக்கு விகிதத்துடன் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக மாறியுள்ளது சமாஜ்வாடி.
பாஜகவின் கோட்டையாக உருமாறியுள்ளதாக பேசப்பட்டு வரும் உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சிக்கு எதிரான அலை உருவாகியுள்ளதையே அகிலேஷ் பெற்றுள்ள வாக்கு விகிதம் காட்டுகிறது.
பெண்கள் பாதுகாப்பு, பட்டியலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை, வேலையிழப்பு, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என அனைத்தும் பாஜகவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
அதுமட்டுமின்றி சிறிய கட்சிகளுடன் அகிலேஷ் அமைத்த கூட்டணி பெரும் பலனை இந்த தேர்தலில் அவருக்கு பெற்றுக்கொடுத்து உள்ளது.
குறிப்பாக ஆவாத் புந்தேல்கண்ட் மற்றும் வட கிழக்கு உபியில் அக்கட்சி 13% வாக்குகளையும், கிழக்கு உபியில் 15 சதவீத வாக்குகளையும் மேற்கு உபியில் 18% வாக்குகளையும் சமாஜ்வாடி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளை வைத்து 2024 மக்களவைத் தேர்தல் பணிகளை தொடங்கலாம் என கணக்கிட்டு வந்த கட்சிகளை அகிலேஷ் யாதவ் பெற்றுள்ள வாக்கு விகிதம் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
இது 2024 மக்களவைத் தேர்தலில் வெடித்து சிகரம் தொடும்.