கற்சிலை முழுவதும் ரத்தம்! சிதைந்து கிடந்த மனித உடல்!

கற்சிலை முழுவதும் ரத்தம்! சிதைந்து கிடந்த மனித உடல்!

 ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,

   கற்சிலை முழுவதும் ரத்தம் இருந்த நிலையில், அதன் அருகில் மனித உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இதனை நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பணியாளர் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தோட்டத்தின் ஒரு பகுதியில் மனித உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குத்தகைதாரருக்கு தகவல் சொன்னார். 

  அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்ட நிலையில், தோட்டத்தில் சிதைந்துபோன நிலையில் உடல் கிடந்துள்ளது. அத்துடன் கை, கால், தலை என அனைத்து உறுப்புகளும் துண்டு துண்டாக அழுகிய நிலையில் கிடந்துள்ளன. அருகில் செருப்பு ஒன்றும் கிடந்துள்ளது. இதனையடுத்து, கோவையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.   

இதுகுறித்து தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அங்கு வந்து கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்துக்கொண்டனர். உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருப்பதால் அது ஆண் உடலா அல்லது பெண் உடலா என்பதை கண்டுபிடிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே தோட்டம் முழுவதும் போலீசார் அலசி ஆராய்ந்த நிலையில், உடல் கிடந்த சிறிது தூரத்தில் கல் ஒன்று நடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டிருப்பதும், அந்த கல் முழுவதும் ரத்தக் கறை இருப்பதும் தெரியவந்தது.

 ஆகவே நரபலி கொடுத்தார்களா அல்லது கொலை செய்துவிட்டு அதனை திசை திருப்ப நரபலி நாடகம் ஆடுகிறார்களா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், கல்லில் படிந்திருந்தது மனித ரத்தமா அல்லது கோழி ரத்தமாக என ஆய்வு செய்ய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.