தாய் தமிழ் மொழி குறித்து கர்வம் வேண்டும்! திருப்பத்தூர் ஆட்சியர் பேச்சு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தலுக்காக செல்வன்.க.கவியரசு என்ற மாணவருக்கு ரூ.15,000/- க்கான காசோலையும், அதே போல் பயிற்சி பெற்றுவரும் 10 அரசு பணியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் என்ற தமிழ் உணர்வு தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். தமிழை அலுவலக ரீதியாகவும் ஆட்சி மொழியாகவும் மட்டும் அணுகாமல், நம் தாய்மொழிக்கு என்ன முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த நிலையில் தமிழை அணுக வேண்டும்.
தாய் மொழியை உணர்ந்து வளர வேண்டும் என்றால் அதை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மொழியின் உடைய சிறப்பம்சம் மற்ற உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலுமே, தோன்றிய காலத்தில் ஒரு மொழியாக இருந்திருக்கும், தற்பொழுது அந்த மொழியமைப்பையும் சொல் அமைப்பையும் அணுகுகின்ற பொழுது அதை இன்னொரு மொழியாக சொல்வார்கள்.
சாசர் ஆங்கில இலக்கண அறிவியலாளர் இருந்த காலத்தில் ஆங்கிலம் தற்பொழுது இல்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் இருக்கின்ற சொல் தற்பொழுது உள்ள காலகட்டத்திலும் உள்ளது. பையவே சென்று பாண்டிய அரசு மன்னனை சேர்க்க என்ற திருநாவுக்கரசரின் பையவே என்ற சொல் தற்பொழுதும் மதுரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1300 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட தமிழ் சொல் தற்பொழுது இலக்கிய ஆளுமைக்கு மத்தியில், புலவர்களுக்கு மத்தியில் இல்லாமல் பாமர மக்களிடையே சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு மொழி தோன்றிய காலத்திற்கும் இருக்கிற காலத்திற்கும் இடைவெளியில் பல்வேறு மாறுதலுக்கு உட்படும், உதாரணம் ஆங்கில மொழி ஆகும். ஆனால் எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் இன்றைக்கும் கன்னி தமிழாகவே இருக்கிறது நம் தாய்மொழி தான்.
எல்லா மொழிகளும், மொழிக்கு இலக்கணம் சொல்லும், ஆனால் மொழி பேசுகின்ற மக்களுக்கு இலக்கணம் சொன்ன மொழி தமிழ் மொழி. நம் தமிழ் மொழி குறித்து பெருமை வேண்டும், மொழி குறித்து கர்வம் வேண்டும், மொழி குறித்த அந்த கர்வத்தையும் பெருமையும் தயவு செய்து, அலுவலகத்தில் இருந்து தொடங்காமல், உங்களுடைய வீட்டில் இருந்து தொடங்குங்கள். வீட்டிலிருந்து தொடங்கி அலுவலகத்திற்கு வந்தீர்கள் என்றால் ஆட்சி மொழி பயிலரங்கம் நடத்துவதற்கு அவசியம் இருக்காது.
ஆட்சி மொழி பயிலரங்கம் எப்போது வெற்றி பெறும் என்றால் உங்கள் ஆட்சி மொழியை உங்கள் தமிழை உங்கள் மொழியை வீட்டில் இருந்து தொடங்குங்கள். பயிலரங்கம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ) முனைவர்.நாகராசன், பல்வேறு துறை பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியிடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.