மன்சூர் அலிகான் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!

  மன்சூர் அலிகான் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!

 ஜி.சாந்தகுமார்,

  நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  நடிகை திரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என மன்சூர் அலிகான் தெரிவித்துவிட்ட நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 கேப்டன் பிரபாகர் படத்தின் வாயிலாக பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்டவர் மன்சூர் அலிகான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். சமீபத்தில் இத்திரைப்படம் குறித்து அவர் பேசும்போது திரிஷா, குஷ்பு மற்றும் ரோஜா ஆகியோர் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

 கடுப்பான திரிஷா, இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்றும், மன்சூர் அலிகானுடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனிடையே திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவும் பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

   தேசிய மகளிர் ஆணையம் இந்த விவாகரத்தை தாமாக முன்வந்து கையிலெடுத்து, மன்சூர் அலிகான் மீது ஐபிசி 509 - பி பிரிவின்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது. மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் அவரை ஏன் சங்கத்தில் இருந்து நீக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியது.

  இந்நிலையில், நான் தவறாக எதையும் பேசவில்லை என்றும், மன்னிப்பு கேட்கவே முடியாது எனவும், தன்னிடம் விளக்கம் கேட்காமல் ஒருதலைபட்சமாக நடிகர் சங்கம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார். மேலும் 4 மணி நேரத்துக்குள் நடிகர் சங்கம் தனது நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் கெடு விதித்தார். இந்த நிலையில் மன்னிப்பு கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைக்கும்படி மன்சூர் அலிகானுக்கு பாரதி ராஜாவும் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தினார்.

  அப்படியிருக்க நடிகர் மன்சூர் அலிகான் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டத்தில் அனைவரிடமும் கலந்தாலோசித்து, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் தெரிவித்ததாகக் சொல்கிறார்கள்.

  இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்¢ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் படி இ.த.ச. பிரிவு 354 - , பிரிவு 509 ( பெண்களின் அடக்கத்தை சீர்குலைக்கும் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  ஆகவே மன்சூர் அலிகானிடம் விரைவில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.