ஆஸ்கார் தம்பதிகளிடம் ஒப்படைக்கபட்ட குட்டி யானை பரிதாப பலி!

ஆஸ்கார் தம்பதிகளிடம் ஒப்படைக்கபட்ட குட்டி யானை பரிதாப பலி!

 உ.சசிக்குமார்,

 ஆஸ்கார் விருது பெற்ற பாகன் பொம்மன், பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்கவிருந்த நேரத்தில், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டியானை பரிதாபமாக பலியானது.

  தருமபுரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை பொம்மன் பெள்ளி தம்பதியிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  அண்மையில் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகள் குறித்த தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது.

  ஆவணப்படம் முழுவதுமே பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்த யானைகள் பற்றிய கதைதான் இடம் பெற்றிருந்தது.

 ரகு என்ற ஆண் யானையையும், அம்மு என்ற பெண் யானையையும் அவர் எப்படி பராமரித்தனர் என்பதை அந்தப்படம் உணர்ச்சி பூர்வமாக விளக்கியிருக்கும்.

 இந்நிலையில் பொம்மன் பெள்ளி தம்பதிகளிடம் தருமபுரியில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை ஒன்று ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹீ தனது டிவிட்டரில்,

 வாழ்க்கை வட்டம் தொடர்கிறது.

   தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற படத்திற்கு ஹேஷ் டாக் இட்டு, பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோர் தற்போது மற்றுமொரு அனாதை யானைக்கு வளர்ப்பு பெற்றோர்கள் ஆகியுள்ளார்கள்.

  தர்மபுரியைச் சேர்ந்த அந்த குட்டியானை தற்போது முதுமலையில் உள்ளது. தமிழக வனத்துறை அந்த 4 மாதங்களேயான குட்டியானையை அதன் கூட்டத்துடன் சேர்ப்பதற்காக கடும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் தற்போது அந்த யானை பாதுகாப்பான கரங்களில் ஒப்டைக்கப்பட்டுவிட்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் ரகுவையும், அம்முவையம் அரவணைத்துக் கொண்டது போல் இந்த குட்டி யானையையும் தங்கள் அன்பு கரங்களால் ஏந்திக்கொண்டார்கள்.

  அவர்கள் அந்த குட்டி யானையை கொஞ்சும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் குட்டி யானை உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. பொம்மன் பெள்ளி தம்பதியின் பராமரிப்பில் தெப்பக்காடு வளர்ப்பு முகாமிலிருந்த குட்டி யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்படக்கூடியது ஆகும்.