சென்னையில் 80 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை! வங்கிகளும், வெறிச்! வேலை நிறுத்தம் வெற்றி!

ம.பா.கெஜராஜ்,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் முழுதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.
இந்நிலையில்,தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் மும்முரமாக நடத்தியதால் மாநிலத்தில் 67 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் 80 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில், இன்று நிலவரப்படி, தமிழகத்தில் அன்றாடம் இயக்கப்பட வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வழக்கமாக இயற்றப்படும் பேருந்துகளில் 10 சதவிகித மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும்; 85 சதவிகித விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் 27 சதவிகிதமும், சேலத்தில் 37 சதவிகிதமும், கோவையில் 21 சதவிகிதமும் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் 57 சதவிகிதமும் மதுரையில் 38 சதவிகிதமும் நெல்லையில், 41 சதவிகிதமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்க்கையில், தமிழகத்தில் சராசரியாக 33 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை.
சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டன.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட்டது.
"ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது" என மத்திய-மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி இன்று வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற்றது.
குறிப்பாக, தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வில் 60 ஆயிரம் பேருந்து தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் முழுமையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பேருந்து சேவை முடங்கியது. தி.மு.க. கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்து இருந்தனர். அவர்கள் மூலம் ஓரளவிற்கு பேருந்துகளை இயக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஏனென்றால் அவர்களும் டிரைவர், கண்டக்டர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அப்படியிருக்க சென்னையில் மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பஸ்கள் முழு அளவில் இயக்குவதற்கு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அவை பலனளிக்கவில்லை.
சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி நகரங்களை மையமாக கொண்டு செயல்படுகின்ற அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 19 ஆயிரம் பேருந்துகள் தினமும் இயக்கப்படும். ஆனால் இன்று அவற்றில் 67 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.
அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் குறைந்த அளவு டிரைவர், கண்டக்டர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினார்கள். வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமின்றி நகர பேருந்துகளும் பெருமளவில் ஓடவில்லை. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடியதால் அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதில்,சென்னையில் தினமும் இயக்கப்படும் 3,175 மாநகர பேருந்துகளில் 80 சதவீத பஸ்கள் கூட ஓடவில்லை. 31 டெப்போக்களிலும் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெறும், 300 பேருந்துகளுக்கு குறைவாகவே ஓடியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
போக்குவரத்து நிலவரம் இதுவென்றால், வங்கி சேவையும் முடங்கின. தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை பணிகள் முழுமையாக முடங்கின.
இங்குள்ள சுமார் 7 ஆயிரம் வங்கிகளில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ.டி.எம்.களில் நிரப்பி வைத்திருந்த பணமும் பல இடங்களில் தீர்ந்து விட்டதால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை நாளையும் இருக்கும்.