என்னய்யா.. நீ மந்திரிதானே.. தயாநிதி மாறன் சார் நீங்க இவ்ளோ கோபக்காரரா?

என்னய்யா.. நீ மந்திரிதானே.. தயாநிதி மாறன் சார் நீங்க இவ்ளோ கோபக்காரரா?

  ம.பா.கெஜராஜ்,

 நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மந்திரியைப் பார்த்து என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே" என தயாநிதி மாறன் கோபப்பட்டு கேட்டது அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. 

  மக்களவையில் ஆ.ராசா பேச ஆரம்பித்த போது பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், திமுக எம்பி தயாநிதி மாறன் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் திமுக எம்.பி.க்கள் பேச எழும்போதெல்லாம் எதிர்வரிசையில் உள்ள ஆளும் பாஜக எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

 அப்படியிருக்க  மக்களவையில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். திமுக தரப்பில் ஆ.ராசா பேச எழுந்து, "என்னை மக்களவையில் பேச அழைத்ததற்கு நன்றி" என்று கூறி உரையை ஆரம்பித்தார். அப்போது, எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பாஜக எம்.பி.க்கள் ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அவரை பேச விடாமல் செய்தனர்.

 அப்போது ஆ.ராசாவுக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் எழுந்து பாஜக உறுப்பினர்களை நோக்கி, 'உதை வாங்கப் போற நீ, டேய் உக்கார்டா, என்னா என்னா பேசுற ?" என்று தமிழிலேயே காட்டமானார். அப்போது, ஆ.ராசா தயாநிதி மாறனை நோக்கி என்ன சொல்றான் அவன் என தமிழில் கேட்டார். எனினும், பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

  மக்களவையை நடத்திக்கொண்டிருந்த மாற்றுத் தலைவர் ராஜேந்திர அகர்வால், பாஜக உறுப்பினர்களை நோக்கி அமைதியாக அமருங்கள் என்று கூறி ஆ.ராசாவை தொடர்ந்து பேச அறிவுறுத்தினார். ஆனாலும், தொடர்ந்து கோஷங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. இதனால் தயாநிதி மாறன், "என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே" என்று கேட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது. தயாநிதி மாறன் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

     அவை சற்று அமைதியான பிறகு பேசிய ஆ.ராசா, "தொண்டை சரியாக இல்லாததால் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், இங்கே பேச வேண்டியது அவசியம் என்று நினைத்ததால் பேசுகிறேன். சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு இந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது, அவர்கள் அரசுப் பள்ளியில், அரசுக் கல்லூரியில் பயின்றவர்கள்" என்று தொடர்ந்து பேசினார்.

    முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் கனிமொழி நேற்று பேச ஆரம்பித்த நிலையில், அவரை பேச விடாமல் இந்தியில் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடுப்பான கனிமொழி, "நீங்க என்ன பேசினாலும் எனக்கு புரியாது. ஏன் புரியாம பேசுற" என்று எதிர் தரப்பினரை பார்த்து கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக தயாநிதி மாறன் களத்தில் குதித்து, "இதுதான் நீங்க பெண்களை மதிக்குற லட்சணமா? ஷேம்லெஸ்" என்று ஆங்கிலத்தில் வறுத்தார்.