இயேசு பிறப்பை கொலுவில் வைக்கும் தம்பதி! 30,000 கைவினை பொம்மைகள் வைத்து அசத்தல்

க.பாலகுரு
கைவினை பொருள்கள் கொண்டு 30,000 கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடும் தம்பதியினர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் என்ற வீட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் வசிக்கிறார்கள்.
இவர்கள் சுமார் 35 வருடங்களாக கைவினை பொருட்களைக் கொண்டு முப்பதாயிரம் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா ஒவ்வொரு வருடம் கொண்டாடி வருகின்றனர்.
இதில் எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் திருவாரூர் தேர், தாஜ்மஹால், இயேசு பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, மகாபாரதப் போர் காட்சிகளை தத்ரூபமாக கைவினை பொருட்களை கொண்டு கொலு பொம்மைகறளை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
தனது மகள் சிறுவயதில் ஆசைபட்டதின் பேரில் தங்கள் வீட்டில் கொலு வைத்து தனது தோழிகளை அழைத்து வரவேண்டும் என கேட்டதற்கு இணங்க இந்த நவராத்திரி கொலு வைக்க ஆரம்பித்து தொடர்ந்து 35 வருடங்களாக முப்பதாயிரம் கைவினைப் பொருட்களை கொண்டு பொம்மைகள் செய்து காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்த வருடம் புதியதாக கேரளா சென்டை மேளம் காட்சிகள், அம்பு படுக்கை, ஐந்து தேர் காட்சிகள் போன்ற கொலு பொம்மைகளை வேஸ்டேஜ் ஆகக்கூடிய பொருட்களாலும் மற்றும் கழிவு பொருட்களாலும் கொலு பொம்மைகள் செய்து நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பூக்கள் தோரணங்கள் பறவைகள் மிருகங்கள் அனைத்தும் கழிவு பொருட்கள் கொண்டே செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி ஒன்பது நாட்களும் ஏராளமான பொதுமக்கள் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.
மக்கள் வரும் போதே குங்குமம் சந்தனம் கொடுத்து வரவேற்றவுடன் கொலு காட்சிகளை பார்த்து விட்டு செல்லும் போது அவர்களுக்கு தாம்பூல பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான பலகாரம் சுண்டல் மிட்டாய்கள் கொடுத்து மகிழ்கின்றனர்.