பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்து பஸ்சுக்காக போராடிய மாணாக்கர்!

க.பாலகுரு,
பஸ்சுக்காக பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் செய்த பள்ளி மாணவ மாணவிகள்.
திருவாரூர் மாவட்ட வலங்கைமான் அருகே, பள்ளி செல்ல கூடிய மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரி 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இம்மாவட்டத்தில், வலங்கைமான் தாலுகாவில் வலங்கைமான் - மன்னார்குடி பிரதான சாலையில் உள்ள அமராவதி பகுதியில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் புளியங்குடி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ளன.
புளியங்குடி திருவோணமங்கலம், அமித்ரவல்லி உள்ளிட்ட கிராமங்களில் 3000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
அதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.
இவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் அவர்கள் வசிக்கக்கூடிய இருப்பிட பகுதியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் நடந்து வந்து அமராவதி பேருந்து நிறுத்தத்தில் ஏறி அதன் பிறகு தான் பள்ளி செல்ல வேண்டும்.
அங்கும் பிரதான சாலையில் சரிவர பேருந்துகள் நிற்காமல் செல்வதால் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளி செல்ல முடியவில்லை. இதனால் பல நாட்கள் அவர்களுக்கு பள்ளியில் விடுப்பு என பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாக அந்த மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும் பிரதான சாலையில் இருந்து ஊர் இருக்கக்கூடிய பகுதிக்கு 7 கிலோமீட்டர் நடந்தே செல்வதால் அந்த பகுதி முழுவதும் காடாக, சீமைகருவேல செடிகள் சூழ்ந்து இருப்பதால் பள்ளிக்கு செல்லக்கூடியமாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் புளியக்குடி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ள பகுதிக்கு ஒரு பேருந்து காலை 10:30 மணி அளவில் செல்கிறது. அந்த பேருந்தினால் எந்த பலனும் இல்லை எனவும், அந்த பேருந்தை மாணவர்களின் நலன் கருதி பள்ளி செல்லும் நேரத்திற்கும் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்திற்கும் பேருந்து வரக்கூடிய நேரத்தை மாற்றி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்கள்.
இந்த போராட்டுத்தாக மாணாக்கர்கள் பள்ளிக்கு போகாமல் விடுமுறை எடுத்து வந்திருந்தனர்.