காங்கிரஸ்க்கு வெற்றி கொடுத்த சசியின் வார் ரூம்! விவரமறிய வாசியுங்கள்!
ம.பா.கெஜராஜ்,
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சசிகாந்த் செந்தில் என்கின்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமைத்த வார் ரூம் முக்கிய காரணம்.
இது பற்றிய விவரம் வருமாறு,
சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கு கர்நாடக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது குறித்த ஆழமான, தெளிவான தெரியும்.
சசிகாந்த் செந்தில், 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்தார். 'தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்' என்று கூறியே அவர் தனது பணியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவரும் அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டது சசிகாந்த் செந்திலே. கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார்.
அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் விரிவாக விமர்சித்து வந்துள்ளார். அவை அனைத்துமே அதிக கவனம் பெற்றவையானது.
அதேபோல் மே 3 ஆம் தேதி சசிகாந்த் செந்தில் பதிவு செய்த ட்வீட் ஒன்று கவனம் பெற்றது. "6 மாத கால கடின உழைப்பிற்கு மே 10ஆம் பலன் கிடைக்கப்போகிறது. கனெக்ட் சென்டர் என்றழைக்கப்பட்ட காங்கிரஸ் வார் ரூம் கட்சியில் கூர்மையான தேர்தல் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தது" என்று பதிவிட்டிருந்தார்.
தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிடுவதற்கு முன்னர் செந்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒரு பெரிய குழுவுடன் இதற்காக ஒரு வார் ரூமே அவர் அமைத்துள்ளார். துடிப்பான இளைஞர்கள் நிரம்பிய அந்த வார் ரூம் மூலம் அவர் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு தேர்தல் அறிக்கையில் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தரும் என்பது குறித்து கட்சி மேலிடத்திற்கு ஓரு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதனை கவனமாக பரிசீலித்த காங்கிரஸ் மூத்த முக்கியத் தலைவர்கள் தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெளியிட்டு தற்போது ஆட்சியையும் பிடித்துள்ளார்கள்.
ஆட்சியை பிடித்த நிலையில் சசிகாந்த் செந்திலின் வார் ரூம் ஊழியர்கள் மேளதாளம் இசைத்து கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.