சரக்கு "பார்" ஆக மாறிய இராணிப்பேட்டை பாலாறு!

  சரக்கு "பார்" ஆக மாறிய இராணிப்பேட்டை பாலாறு!

 ம.பா.கெஜராஜ்,

 பாலாற்றில் தண்ணீர் பாய்கிறதோ இல்லையோ? பீர் பிராந்தி ஊறிக்கொண்டிருக்கிறது, இராணிப்பேட்டை மாவட்டம், பழைய பாலாற்று பாலத்தில் ஆற்றுக்கொ சொந்தமான இடத்தில் அரசு மதுபானக்கடை போடப்பட்டிருக்கிறது. அங்கு சரக்கு வாங்கும் மதுபிரியர்கள் அருகில் உள்ள காரிய மேடை  மற்றும் எல்லைக்கோவில் சமாதி ஆகியவற்றின் மீது அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இந்த செயலை உடனடியாக தடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு சுன்னத் ஜமாஅத் என்கிற அமைப்பைச் சேர்ந்த மக்கான் ஷரிப் என்பவர் டாஸ்மாக்கின் மாவட்ட மேலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

  அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,  மேற்கண்ட விலாசத்தில் வசித்து வரும் நான், நான் சார்ந்துள்ள அமைப்பின் சார்பில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறேன். தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகள் பலவற்றில், நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுவை விற்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் இது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. மேலும் இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய மார்க்கெட் பகுதிகளில் டாஸ்மாக் மது வகைகள் இரவு 12 மணிக்குக்கூட கள்ள மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட கள்ள வியாபாரிகளுக்கு டாஸ்மாக் ஊழியர்கள், லாபநோக்கோடு  மது பாட்டில் பெட்டிகளை மொத்தமாக சப்ளை செய்து வருகிறார்கள்.

 இதனால் இல்லீகல் மதுகூடங்களுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் வழி வகுக்கிறார்கள். அதே போல் இராணிப்பேட்டையில் பாலாற்றிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பாலாற்றைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் பாலாற்றின் கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் ஆற்றை பாழ் செய்யக்கூடிய எந்த செயலையும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 தீர்ப்பு அவ்வாறு இருக்க பாலாற்றில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கும் போதை ஆசாமிகள் அங்குள்ள காரிய மேடை மற்றும் எல்லைக் கோவிலிலும் அமர்ந்து குடித்து அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்ணாடி பாட்டில்களை உடைத்தும், மதுக்களை ஆற்றில் ஊற்றியும் பாழ்படுத்தி மாசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை தடுக்கக்கூடிய டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் பணம் கிடைத்தால் போதுமானது என்று செயல்படுகிறார்கள்.

 மேலும் தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டிலேயே இந்த மதுபானக்கடை அமைந்துள்ளது. அய்யா அவர்கள் இது குறித்து விசாரித்து பாலாற்றில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றியும், கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் மீதும், இல்லீகல் பார்காரர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

  இது குறித்து மனுதாரர் தெரிவிக்கையில், டாஸ்மாக் மாவட்ட செயலாளர் திரு.செங்கிஸ்கான் எனது மனுவை படித்துப் பார்த்தார். பட்டா இடம் இல்லாமல் வேறு இடத்தில் மதுக்கடை வைக்க அனுமதியில்லை. நீங்க சொல்லியிருக்கிற இடத்தை செக் பண்ணிக்கொள்கிறேன்.

  காரிய மேடையில் மது குடிக்காமல் இருக்க அதை சுற்றியும் வேலி அமைக்க கலெக்டரிடம் கேட்டிருக்கிறேன்.

  மதுவை விற்பது மட்டும் தான் எங்க வேலை, அதை எங்கு குடிக்கிறார்கள் என்று பார்ப்பது எங்க வேலையில்லை. அது போலிசாரின் வேலை. அதற்கென்றே மதுவிலக்கு போலிசார் இருக்கிறார்கள். மற்றபடி எந்த பர்டிகூலர் கடையில் அதிகவிலைக்கு விற்கிறார்கள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

ஆனால் மாவட்டத்திலுள்ள எல்லா கடைகளிலும் தான் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள் என்றார் மனுதாரர்.