சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும்! அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சமூக வலை தளங்களில் பரப்பப்படும் தகவலே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது, காவல் மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மத்தியில் பேசினார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குற்றச் சம்பவங்களை கண்டறிந்து தடுப்பது, கொலை-கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது, சொத்து தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். எந்த அளவுக்கு குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை கண்டறியவும் உத்தரவிடப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க அறிவுரைகளை வழங்கி விரிவாக பேசினார். கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசாருக்கு இருக்கும் பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுபட என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் பேசுகையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது. அவற்றை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தல் வருகிறது, சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். காவல் மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். போதை பொருள் தடை செய்யப்பட்டுவிட்டது என சொல்லும் அளவில் மாவட்ட எஸ்.பி.க்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தலைமை செயலாளரும், டிஜிபியும் உறுதிபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.