பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் காலமானார்! முதல்வர், சென்னை பிரஸ் கிளப் அஞ்சலி!

 ம.பா.கெஜராஜ்,

 

கடந்த 40 ஆண்டுகளாக பேட்ரியாட்  ஆங்கில நாளிதழ்,லிங்க் ஆங்கில வார இதழ் , பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா , நியுஸ் டுடே , தி இந்து  ,ஃப்ரண்ட்லைன்' ஆகிய  செய்தி ஊடகங்களில் சிறப்பாக பணியாற்றியவர் திரு.துரைராஜ்.

 அவரது மறைவு செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். பத்திரிகை மூலம் சமூக பணிகளை செய்த அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  அதே போல் சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஒரு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

   கடந்த 41 ஆண்டுகள்  சமுக அக்கறைக் கொண்ட பத்திரிகையாளராக பெரும் பங்களிப்பைத் தந்தவர் மூத்த பத்திரிகையாளர் தோழர் எஸ்.துரைராஜ்.

பத்திரிகையாளர்களின் குரல் நசுக்கப்படும் காலங்களில் அடக்குமுறைக்கு எதிராக ஓங்கி ஒலித்தவர்.

  பத்திரிகையாளர் நலன்களுக்கு தொடர்ந்து பாடுபட்டவர். சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகிய பத்திரிகையாளர் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்த  தோழர் எஸ்.துரைராஜ் ( வயது 72 )இன்று நம்மிடையே இல்லை. 

   உடல் நலிவுற்று சிகிச்சைப் பெற்றுவந்த தோழர்.எஸ்.துரைராஜ் அவர்கள் இன்றைய தினம் (15-01-2022 ) இயற்கை எய்தினார்  என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. தோழரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது.

  மிக எளிமையான மனிதராக திகழ்ந்த தோழர்.எஸ்.துரைராஜ் அவர்கள் , புது தில்லி - செண்ட்ரல் நியுஸ் ஏஜென்சி , புது தில்லியில் இருந்து வந்து கொண்டிருந்த பேட்ரியாட்  ஆங்கில நாளிதழ்,லிங்க் ஆங்கில வார இதழ் , பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா , நியுஸ் டுடே , தி இந்து  ,ஃப்ரண்ட்லைன்' ஆகிய  செய்தி ஊடகங்களில் சிறப்பாக பணியாற்றியவர் . 41 ஆண்டுகால இதழியல் பணிகளில் விளிம்பு நிலை மக்களுக்காக , மீனவர்கள் , விவசாயிகள் , மலைவாழ் மக்கள் நலன்களுக்காக தனது எழுத்தின் மூலம் பாடுபட்டவர்.

சென்னை , புதுச்சேரி ,தூத்துக்குடி , கடலூர் ,விழுப்புரம்,மதுரை , திருச்சி  ஆகிய இடங்களில் பணியாற்றிய தோழர் எஸ். துரைராஜ் மிக அற்புதமான மனிதர். மனிதர்களிடம் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் பழகியவர். திருச்சியில் 10-08-1951 அன்று பிறந்த தோழர் எஸ்.துரைராஜ்  தனது சொந்த ஊரான அதே திருச்சியில் இயற்கை எய்தியுள்ளார்.  தோழரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

  தோழர் எஸ்.துரைராஜ் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நாளை ( 16-01-2022 ) ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி , பிஷப் கல்லூரி அருகில் உள்ள 786 ,16 வது குறுக்குத் தெரு , வாசன் காலனி, வயலூர் சாலை  திருச்சி என்ற முகவரியில் நடைபெறும்.

ஆழ்ந்த துயரங்களுடன்

பாரதிதமிழன்,

இணைச் செயலாளர்,

சென்னை பத்திரிகையாளர் மன்றம்.