மதிமுக படகிலும் ஓட்டையா? ராஜினாமாவை திரும்பப்பெறும் வைகோவின் மகன்!

ம.பா.கெஜராஜ்,
பா.ம.கவில் மகனும் அக்கட்சியின் தலைவராகவும் இருந்த அன்புமணியிடமிருந்த பதவியை மருத்துவர் ராமதாசு எடுத்துக் கொண்டார். இது அரசியல் வட்டத்தை பரபரக்கவைத்தது. இந்நிலையில் வைகோவுக்கு தெரியாமலேயே அவரது மகன் மதிமுக வின் முதன்மை செயலாளர் பதவியிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக தந்தை வைகோவை சந்தித்திருக்கிறார்.
மதிமுகவில் மல்லை சத்யாவை மையப்படுத்தி உரசல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பின்னணி வாரிசு அரசியல் விவகாரம் தான் பெரிய விஷயமாக முன்னிறுத்தப்பட்டது. இந்த சூழலில் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை துரை வைகோ அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
துரை வைகோ அதிரடி அறிக்கை
துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக கட்சிக்கும், தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி ஒருவர் சுகம் கண்டு வருகிறார். இதனால் முதன்மை செயலாளர் என்ற பதவியில் பணியாற்ற விரும்பவில்லை. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
ஆனால் அதன்பின்னர் தலைமை கழகம் முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். மதிமுகவின் முதல் தொண்டனாக இருந்து உழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
துரை வைகோ எடுத்த அதிரடி முடிவு பற்றி தகவலறிந்து வைகோ பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு சற்றுமுன் துரை வைகோ சென்றுள்ளார்.
அங்கு வைகோ உடன் பேசி வருகிறார். இந்த சந்திப்பில் துரை வைகோ சமாதானம் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கட்சியில் நீண்ட காலம் பயணித்த மல்லை சத்யாவிற்கு ஆதரவாக பேசுவாரா, தனக்கு அடுத்தபடியாக கட்சியில் முன்னிலைப்படுத்தப்படும் துரை வைகோவிற்கு ஆதரவாக பேசுவாரா? மல்லை சத்யா ஓரங்கட்டப்பட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில் மதிமுக படகிலும் ஓட்டை விழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில் வைகோ தனது மகனை சமாதானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் பதவியை ராஜினாமா செய்ததை வாபஸ் பெறுவார்.