“எடப்பாடி துரோகி” போஸ்டரால் பரபரப்பு! இரட்டை இலை - தாமரை முறிவா?

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி துரோகி என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் இரட்டை இலை - தாமரை இடையாயான அரசியல் கூட்டு முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது விதவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. விங் நிர்மல்குமார் உட்பட பலர் பிய்த்துக்கொண்டு பறந்துள்ளார்கள்.
அப்படி வெளியேறுபவர்கள் பா.ஜ.க. வில் உள்ள பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவில் சேருவது மிகப்பெரிய அரசியலாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்தும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், எங்கள் முதல்வர் அண்ணாமலை, எடப்பாடி ஒரு துரோகி போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துவிடுமா என்று பேசப்படுகிறது.
அதிமுக - பாஜக இடையிலான விரிசல் என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தே தொடங்கி விட்டது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் நடவடிக்கைகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
நடப்பதெல்லாம் நிஜமா அல்லது டிராமாவா என்பது தான் புரியவில்லை.