அம்மா உணவகத்தை இடித்துவிட்டு மாடர்ன் டாய்லெட்டா? பொதுமக்கள் குமுறல்!

ஜி.சாந்தகுமார்,
சென்னையில் முதன் முதலாக திறக்கப்பட்ட 15 அம்மா உணவகங்களில் ஒன்றை இடிக்க சென்னை மாநகராட்சி அனுமதியளித்திருக்கிறது. அதற்கு பதில் அந்த இடத்தில் மாடர்ன் டாய்லெட் கட்ட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை மாநகராட்சி 146-ஆவது வார்டு, மதுரவாயலில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் அருகே உள்ள அம்மா உணவக கட்டடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்மா உணவகம் முதலில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில்
கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டடம் கடந்த வருடம் பெய்த கன மழையில் சிதலமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் அங்கு இயங்கி வந்த அம்மா உணவகம் அருகில் உள்ள இ சேவை மையக் கட்டடத்தில் கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது.
அந்த இ-சேவை மையக் கட்டடமும் சிறிய அளவில் இருப்பதால், இங்கு உணவு சமைத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. பரிமாறப்பட்டு வாடிக்கையாளர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வசதி இல்லை. உணவு பார்சலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு அங்கு மாடர்ன் டாய்லெட் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதன் முறையாக துவக்கப்பட்ட இந்த அம்மா உணவகக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பழைய அம்மா உணவக கட்டடத்தை சரிசெய்து அதில் மீண்டும் உணவகம் செயல்பட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டிடத்தை இடிக்க அனுமதிப்போம் என்று எதிர்ப்புக்காட்டியிருக்கிறார்கள்.