நிஜ சமூக போராளி மறைந்தார்!

ம.பா.கெஜராஜ்,
நேற்று 26.02.2023 அன்று காலை நிஜ சமூகப் போராளி வழக்கறிஞர் அய்யா திரு. பி.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
அவர் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டுகளை சத்தியமாக இன்னொருவர் ஈடு செய்யவே முடியாது.
1991 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்டில் ஒரு வழக்கு தொடுத்து அது தொடர்பாக பெற்ற தீர்ப்பு இந்திய கண்டத்திற்கு உள்ள நதிகள் மற்றும் நீர் நிலைகளை உயிர்ப்பிக்க வைத்தது எனலாம்.
அவரும் வேலூரைச் சேர்ந்த ஆடிட்டர் கௌதம் என்பவர் உள்ளிட்ட சிலர் இணைந்து வேலூர் சிட்டிசன் பாரம் என்பதை துவங்கி அதன் மூலமாக மேற்கொண்ட வழக்கை தொடங்கினர்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன கழிவு நீர்களும், இராசயன திடக்கழிவுகளும் நீர்நிலைகளில் கலந்து விடுவதை தடுப்பதே இந்த வழக்கின் நோக்கம். குறிப்பாக வேலூர் ராணிப்பேட்டை பேர்ணாம்பட்டு போன்ற பகுதிகளிலும், மேலும் பிற மாவட்டங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளையே இந்த வழக்கு குறிவைத்தது.
இந்த வழக்கில் தீர்ப்பில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை இழுத்து மூடும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில், நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எந்த தொழிற்சாலையும் அதாவது இரசாயன கலவையை வெளியேற்றும் தொழிற்சாலை அமைக்க கூடாது, அதற்கு அரசு மின்சாரமோ அனுமதியும் வழங்கக்கூடாது என்று தீர்ப்பு கூறியது.
பின்னாளில் அந்த தீர்ப்பு ஐந்து கிலோ மீட்டர் வரை என்று நீண்டது, அப்படி ஒரு பரபரப்பான தீர்ப்பு பெற்றவர்.
இந்த வழக்க்கின் தாக்கம் தான் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக காரணமாயிற்று. கூடவே இராசயான கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுத்தார். அதற்காக "லாஸ் ஆஃப் இக்குவாலேஜி" உருவாக்கப்பட்டது.
அதேபோல் பல்வேறு வழக்கு சொல்லிக் கொண்டே போகலாம், வேலூர் செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை ஒரு ஓட்டலுக்கு மாதம் 150க்கு வாடகை விட்டிருந்தது மாவட்ட நிர்வாகம். அதை எதிர்த்து வழக்கு தொடுத்து வாடகையை உயர்த்தி அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுத்தார்.
அப்புறம் கோவில் இல்லாத கோட்டை என்ற சொல்லுக்கு ஆளான வேலூர் கோட்டைக்குள் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் உயிர்பெற்றது இவரால் தான். அதற்காக எழுந்த வழக்கை கட்டணம் பெறாமல் நடத்தி வெற்றிபெற வைத்தவர்.
கடந்த 1998 அல்லது 1999 காலகட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் ரா.சிவக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார்.
அப்போது ஊரிசு கல்லூரி, காபு அரங்கத்தில் அயோடின் உப்பு பயன்பாடு என்கின்ற அரசின் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேற்சொன்ன கலெக்டர் தான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
அந்த விழாவில் நமது அய்யா அவர்களை நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக பேச அழைத்தனர் மிகவும் விரிவாக எளிமையாக மேடையில் ஏறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடிக்கடி வாட்ச்சை பார்த்த கலெக்டர் சிவகுமார் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து அய்யா பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பேச்சை முடித்துக் கொள்ளும்படி சைகை காட்டினார்.
அப்போதும் அய்யா கோபப்படாமல் தன்னுடைய கருத்துக்களை பார்வையாளர்களுக்கு பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அந்த அநாகரிக கலெக்டர் ஆவேசமாக எழுந்து, அய்யா அவர்களை பிடித்து தள்ளிவிட்டார். கூடவே அய்யா அவர்கள் மீது பொய்வழக்கும் போடவைத்தார்.
வழக்கறிஞர்கள் மத்தியில் இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது, வேலூர் நீதிமன்ற வரலாற்றில் அதிக நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டமாக இது நடந்தது.
வழக்கு என்று எடுத்துக் கொண்டால் வழக்காடிக்கு அதாவது தன்னுடைய கிளைண்டுக்கு மிகவும் விசுவாசமாகவும் செயல்பட்டவர். ஜூனியர்களை மிகவும் மதிக்கத்தக்கதாக ஒரு தொகையை கொடுத்தும் நல்லபடியாக பார்த்துக் கொண்டார்.
வேலூர் கோட்டை வெளி மைதானத்தை நகராட்சிக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் வாடகை என தொகை விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. அதன்மூலம் நகராட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகை விட்டு வருவாயை ஈட்டி மக்கள் நற்பணிக்கு செலவிட அந்த திட்டம் வகுக்கப்பட்டது.
நாளடைவில் அந்த திட்டம் காலாவதி ஆகிவிட்டது, அதற்கும் வேலூர் சார்பு நீதிமன்றத்தில் அய்யா அவர்கள் வழக்கு தொடுத்தார்.
அதேபோல கருணாநிதி ஸ்டேடியம் இப்போது நேதாஜி ஸ்டேடியம் அதற்கும் வழக்கு தொடுத்தார்.
இப்படி எண்ணற்ற வழக்குகளை சொல்லலாம். அபோதெல்லாம் கனிணி, இன்டர்நெட் போன்ற வசதி எதுவுமே கிடையாது. வழக்குக்கான விவரங்களை தேடி அலைந்து தான் எடுப்பார். எதிலுமே அவருக்கு தன்னலம் கிடையாது. இப்போதெல்லாம் ஒரு பெட்டிஷன் எழுதி போட்டாலே போதும், சம்பந்தப்பட்டவர்கள் வந்து அட்ஜஸ்ட் பண்றாங்க இவரிடம் அதுமாரி பேசவே முடியாது.
தோல் தொழிற்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரே காரணத்தை மனதில் வைத்து தன்னுடைய இறுதி நாள் வரை தோல் செறுப்பை அவர் அணியவில்லை.
இப்படிப்பட்ட மாமனிதரை நாம் இழுந்து விட்டோம். அவருடை சீடர்களில் ஒருவனாக அவருக்கு எனது வீர வணக்கத்தை கடைசியாக தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் போற்றி வணங்கிய முருகபெருமானின் மடியில் அவர் ஓய்வு எடுக்க பிரார்த்தனை செய்கிறோம்.
இப்படிக்கு, செய்தியாளர்கள்,ஜி.குலசேகரன், ம.பா.கெஜராஜ், வழக்கறிஞர்.ஜி. எஸ்.மேத்யூராஜ்..