கேரளா நிலச்சரிவில் 93 பேர் பலி - மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்!

ம.பா.கெஜராஜ்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 93 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறன. வயநாடு நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ளதால், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த பலர் தினமும் பணி நிமித்தமாக வயநாடு சென்று வருகின்றனர்.
அவ்வாறு பணிக்குச் சென்றவர்களில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். காளிதாஸ், உறவினர் வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது.
நிலச்சரிவிருந்து மீட்கப்பட்ட காளிதாஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக வயநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கூடலூர் முன்னாள் எம்எல்ஏ-வான திராவிட மணி தலைமையில் திமுகவினர் வயநாடு அரசு மருத்துவமனைக்குச் சென்று, காளிதாஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது உடலை கூடலூர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் முண்டக்கை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட நிறுவனத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்துவந்தனர்.
அந்த வீடுகளில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்களே. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்த லைன் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
முண்டக்கை பகுதியை இணைக்கும் பாலம் உடைந்துள்ளதால் அரசு அதிகாரிகளும், தேயிலை தோட்ட நிறுவன அதிகாரிகளும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியவில்லை"65 குடும்பங்கள் வசித்துவந்த நான்கு லைன் வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது.
குடியிருப்பையொட்டி வெறும் 8 மீட்டர் ஓடை இருந்தது. நிலச்சரிவுக்கு பின் இந்த ஓடை பெரிய ஆறு போல் காட்சியளிக்கிறது. குடியிருப்பில் வசித்து வந்தவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. பாலம் உடைந்துள்ளதால் அதிகாரிகள் யாரும் இங்கு வரமுடியவில்லை.
இதற்கிடையே, வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், 100 பேருக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளுடன் ராணுவம், கடற்படை இணைந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சூரல்மலா பகுதியில் பலரது நிலை என்னவானது என்று தெரியாத சூழலே நிலவுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிலச்சரிவால் வயநாட்டின் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன.