ஸ்மார்ட் சிட்டி பணி சோகம்! மூத்த வழக்கறிஞரின் கால் வெட்டி எடுக்கப்பட்டது! நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தியும் மெத்தனம் காட்டும் மாநகராட்சி!
கு.அசோக்,
வேலூர் மாநகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மக்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்திவருகிறது.
இதனால் இரண்டு வழக்கறிஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை சுட்டிக்காட்டி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தியும் கூட மாநகராட்சி நிர்வாகம் குறட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
ஸ்மார்சிட்டி திட்டம் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் போன்றவை வேலூர் மாநகராட்சி பகுதியான வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அவற்றை முறையாக செய்யாததால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் கைகால் உடைந்து இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதில்,வழக்கறிஞர் தத்துபுத்திரன் என்பவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஸ்மார்டி சிட்டி பணி நடந்துவரும் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.அலுவலக சாலையில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
இதே போன்று வேலூர் பில்டர் பெட் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த மகாதேவ் சிங் என்ற மூத்த வழக்கறிஞர் மீது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் அவரது கால் முழுவதும் நொறுங்கி ஒரு கால் முழுவதும் அகற்றப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் - பாதாள சாக்கடை பணி மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக அமைத்துத்தர தர கோரியும்-வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு செய்தனர்.
மேற்படி விபத்தில் பாதிப்படைந்த வழக்கறிஞர்களுக்கு ஒப்பந்ததாரர் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் குடிருப்பிலிருந்து நீதிமன்றத்துக்கு வர மாஜிஸ்திரேட்டுகள் மிகவும் சிரமப்படும் சூழலை ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஒரு சாலையை தோண்டினால் அதை ஆறு மாத காலத்துக்கு அப்படியே விட்டுவிடுகிறார்கள். பக்கவாட்டு கால்வாய் கூட ஒப்பந்ததாரர் இஷ்டத்துக்கு தோண்டி போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.
மேற்படி கால்வாய் தோண்டும் பணியினால் சத்துவாச்சாரி பகுதி 2-ல் 59 வது தெரு முதல் பல வீதிகளில் குழாய் நீர் பைப்புகளை உடைத்து போட்டுள்ளனர்.
இதனால் 5 மாதங்கள் ஆகியும் அந்த பகுதிகளுக்கு தண்ணிர் சப்ளை இல்லை.
இந்த பகுதி ஸ்மார்ட் சிட்டி பணிகளை சுகுமார் என்கிற அதிமுககாரர் செய்து வருகிறார். இவர் தான் வேலூர் புதிய பேருந்து கட்டுமான பணிகளையும் ஒப்பந்தம் செதுள்ளார்.
ஆமையைவிட மெதுவாக பணிகளை செய்து வரும் அவர் மக்களின் இன்னல்களைப் பற்றி கவலைபடாமல் ஏதோ செய்து வருகிறார்.
மேலும்,சத்துவாச்சாரி அனைத்து பகுதிகளிலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிந்துக் கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் சீர்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆகியோரிடம் வழக்கறிஞர்கள் தினகரன்,சீனிவாசன்,ரவிராமன்ஆகியோர்தலைமையில் மனு அளித்தனர்.
இதையெல்லாம் கேட்டறிந்த ஒரு சீனியர் அரசு அலுவலர், என்ன இது பன்றி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று நையாண்டி செய்தார்.