மாணவர்களால் கல்லூரிக்கு பெருமைகள் கிடைத்துள்ளன! பிஷப் பேச்சு! மலர் வெளியிட்ட ஜி.வி.சம்பத்!

மாணவர்களால் கல்லூரிக்கு பெருமைகள் கிடைத்துள்ளன! பிஷப் பேச்சு! மலர் வெளியிட்ட ஜி.வி.சம்பத்!

 ம.பா.கெஜராஜ்,  

 ஊரிசு கல்லூரி வணிகவியல் துறை பொன்விழா மலரினை நறுவீ மருத்துவமனை தலைவரும், வணிகவியல் துறையின் முன்னாள் மாணவர் சங்க தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் வெளியிட்டார்.

    வேலூர் ஊரிசு கல்லூரி வணிகவியல் துறை பொன்விழா, முன்னாள் மாணவர் சங்க நினைவு கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று ஊரிசு கல்லூரி காப் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வரவேற்றார்.

  நிகழ்ச்சிக்கு ஊரிசு கல்லூரி நிர்வாக குழு தலைவரும், வேலூர் சி.எஸ்.ஐ. பேராயர் எச்.சர்மா நித்யானந்தம் தலைமை வகித்து வணிகவியல் துறை நூலினை வெளியிட்டு தலைமை உரையாற்றுகையில்:

  இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களால் இக்கல்லூரிக்கு பல பெருமைகள் கிடைத்துள்ளது. மாணவர்களிடையே மனித நேயம் என்பது முக்கியமானது. மாணவனை அறிவு ஜீவியாக மாற்றும் நிறுவனமாக ஊரிசு கல்லூரி விளங்கி வருகிறது. இங்கு வணிகவியல் துறை பொன்விழா நினைவு கட்டிடம் கட்டப்பட உள்ளது, அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.

 அந்த கட்டிடத்தை சிறப்பாக கட்டி முடிக்க முன்னால் மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அடுத்த ஆண்டு இக்கல்லூரியின் 125 ஆண்டு விழா நடைபெற உள்ளது. அதனை அனைவரும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  நிகழ்ச்சியில் ஊரிசு கல்லூரி வணிகவியல் துறை முன்னால் மாணவர் சங்க தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊரிசு கல்லூரி வணிகவியல் துறை பொன்விழா மலரினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு இக்கல்லூரியில் எம்.காம். முதுகலை பட்டப்படிப்பு படித்தேன். நான் படித்த காலத்தில் எதற்காக படிக்கிறோம் என்ற எவ்வித நோக்கமும் இல்லாமல் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக படித்த நிலை இருந்தது.

   ஆனால், இன்றைய கால கட்டத்தில் மாணவர்களிடத்தில் அத்தகைய எண்ணம் இருக்க கூடாது. படிப்பு என்பது மிக முக்கியமானது. மாணவர்களின் வாழ்க்கை முறையை உயர்த்தும் சக்தி அந்த படிப்புக்கு உள்ளது. எனவே, மாணவர்கள் தங்களின் வாழ்கையில் முன்னேறுவதற்கு தகுந்த கல்வியை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தி படித்து உயர வேண்டும்.

சும்மா வாசியுங்களேன்:-இனி நேரலை ஒளிபரப்பிற்கு அனுமதி வாங்கனும்! 30 நிமிடம் சமூக காட்சிகளை போடனும்! தொலைக்காட்சி சேனல்களுக்கு புதிய நிபந்தனைகள்!

   இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெரிய பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் வகித்துள்ளது பெருமைக்குறியது.

  மனித நேயம் என்பது மிக முக்கியமானது, அது மாணவர்களுக்கு வர வேண்டும். அதை பற்றி இங்கு பேசிய பேராயரும் வலியுறுத்தியுள்ளார். இந்த கல்லூரிக்கு தனித்தன்மையை உருவாக்கி கொடுக்கும் துறை என்றால் அது வணிகவியல் துறைதான். அடுத்த ஆண்டு இக்கல்லூரியின் 125 ஆண்டு விழா வருவதாக பேராயர் தெரிவித்துள்ளார். எனவே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த விழாவினை சிறப்பாக நடத்த இப்போதிலிருந்தே அதற்கான பணியை நாம் தொடங்கி விடுவோம் என்று பேசினார்.

   இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் ஏ.எஸ்.ஏ. சண்முகம், செயலாளர் ஸ்ரீதர் பலராமன், பொருளாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம். கலையரசு, சி.எஸ்.ஐ. பேராயத்தின் செயலாளர் ஜெராட் அருள் ஜெபரூபன், பொருளாளர் டி. சுந்தர்ராஜ், துணைத் தலைவர் பி. சுரேஷ் ஆனந்தகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் அருளப்பன் மற்றும் துறை தலைவர்கள், முன்னாள் இன்னால் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், வணிகவியல் துறை முன்னாள் மாணவர் சங்க அலுவலர் முனைவர் டி. சத்திய பிரசாத் குமார் நன்றி கூறினார்.