சரக்கு ரயிலை கும்பிட்டு வழியனுப்பிவைத்த மத்திய மந்திரி! 50 ஆண்டு முந்தையதை காட்டி பழி போடும் பாஜக - ராகுல்காந்தி

சரக்கு ரயிலை கும்பிட்டு வழியனுப்பிவைத்த மத்திய மந்திரி! 50 ஆண்டு முந்தையதை காட்டி பழி போடும் பாஜக - ராகுல்காந்தி

 ஜார்ஜ்.ரவி,

 ஒடிசா, பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார்.

  அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரெயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் எழுந்து சொல்லவில்லை.

   காங்கிரஸ் மந்திரி, "இது என் பொறுப்பு, நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார். எனவே இதுவே எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனை, நாங்கள் சாக்குப்போக்குகளை கூறுகிறோம், யதார்த்தத்தை ஏற்கவில்லை.

   நீங்கள் அவர்களிடம் (பாஜக) எதையும் கேளுங்கள், அவர்கள் திரும்பிப் பார்த்து பழியைக் கடந்து செல்வார்கள். ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்று கேளுங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று பேசுவார்கள் என தெரிவித்தார்.

 கும்பிட்டு வழியனுப்பிவைத்த மத்திய மந்திரி!

 ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது. சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கைகூப்பி கும்பிட்டு வழியனுப்பி வைத்தார்