மசூதிக்கு எதிரான பொதுநல வழக்கு:- 25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

உ.சசிகுமார்,
சென்னையில் உள்ள மசூதி ஒன்றுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
திருப்பூரைச் சேர்ந்தவர் வக்கீல் கோபிநாத், இவர் இந்து முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவர் ஆக உள்ளார். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில் "சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பல ஆண்டுகளாக விடுதியாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் ரப்பானியா அரபு கல்லூரி தொடங்கினர். தற்போது, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல், அந்த இடத்தில் மசூதி கட்டி வருகின்றனர்.
ஒரு மத வழிபாட்டுத் தலத்துக்கு அருகில் மற்றொரு மத வழிபாட்டுத் தலம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி வேணுகோபால் பரிந்துரை அறிக்கை வழங்கியுள்ளார்.
இந்த மசூதி கட்டும் இடத்துக்கு மிக அருகே 400 ஆண்டு பழமையான சிவன் கோவில் உள்ளதால், இந்த மசூதி கட்டுமானத்தை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "கல்லூரி வளாகத்தில் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்படுகிறது. திருப்பூரை சேர்ந்த மனுதாரர் சென்னையில் மசூதி கட்டுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் உள்நோக்கம் உள்ளது. இவருக்கு அபராதம் விதிப்பதுடன், பொதுநல வழக்கை தாக்கல் செய்ய தடையும் விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு என அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்தனர்.