பால்கார வாலிபரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வெறிக்கும்பல்!

பால்கார வாலிபரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வெறிக்கும்பல்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 பால்கார வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வெறிக் கும்பல் சாவகாசமாக தப்பி சென்றிருக்கிறது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை நடக்காத தினம் தான் விசேஷம். அந்த அளவுக்கு கிரைம் ரேட் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பண்டாரம் பட்டி மேல தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 27). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். காலையில்  வழக்கம் போல் பால் வியாபாரத்தை முடித்து விட்டு மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில்  தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.

  உஷாரான  நந்தகுமார்¢ தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. நந்தகுமார் வெட்டுபட்டு சாயுந்ததும் அவர் இறந்துவிட்டாரா என்று உறுதி செய்துக் கொண்ட கொலை கும்பல் பின்னர் அங்கிருந்து சாவகாசமாக தப்பினர்.

   கொலை குறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நந்தகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  நந்தகுமாரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் டி.எஸ். பி. சுரேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.