18 மாதங்களில் 75,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் அறிவித்தார்!

18 மாதங்களில் 75,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் அறிவித்தார்!

  டி.இ.முகமது,

 எதிர் வரும் 18 மாதங்களில் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள்  நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு,

  'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்' என்பதை உணர்ந்த காரணத்தால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன்.

  வரும் ஜனவரி 2026க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

   அதாவது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்தால் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.