போலிஸ் வாகனங்கள் சேதம்-காவலர் காயம்:- மாடு முட்டி இளைஞர் இறந்ததால் கலவரம்!

போலிஸ் வாகனங்கள் சேதம்-காவலர் காயம்:- மாடு முட்டி இளைஞர் இறந்ததால் கலவரம்!

 ம.பா.கெஜராஜ்,

 எருது விடும் விழாவில் மாடு முட்டி விழுந்த இளைஞரை காவல்துறை தாக்கியதால் இறந்துவிட்டதாக கூறி போலீசாரை முற்றுகையிட்ட மாடு பிடி வீரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல் நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் திருவிழா முடிந்த  அடுத்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  

 இந்நிலையில் காலை ஏழு மணி முதல் 2 மணி வரை  எருது விடும் திருவிழா நடைபெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

  அப்படியிருக்க அனுமதி நேரத்தை கடந்து எருது விடும் திருவிழா நடைபெற்றது.  அப்போது சுமார் 2.30 மணி அளவில் திடீரென எருது ஒன்று சீறிப் பாய்ந்தது.

  அப்போது அங்கு இளைஞர்களுடன், பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞரும் மாடுகளை விரட்டிக் கொண்டிருந்தார்.

 அப்போது அவரை மாடு முட்டியதில்  காயத்துடன் மயங்கி கீழே விழுந்தார். அப்போது அங்கு கும்பல் கூடிய சூழலில் போலீசார் அங்கிருந்த வாலிபர்களை விரட்ட லத்தியை லேசாக சுழற்றினர்.

  இந்நிலையில் வருவாய் துறையினர் அங்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் நண்பர்களே முஷரப்பை இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

   அங்கு முஷரப்பை சோதித்த மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட போது அது பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

 இதனால் ஆத்திரம் அடைந்த 200-க்கும் மேற்பட்ட  அப்பகுதி இளைஞர்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிமந்தை பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

  இதையறிந்த வருவாய்துறையினர் ஜீப்பில் அந்த பகுதிக்கு வந்த போது ஜீப்பை இடைமறித்த இளைஞர்கள் வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

  மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போல்ஸ் பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினர்.

  மதியம் இரண்டரை மணிக்கு துவங்கிய இந்த பிரச்சனை இரவு 8.30 மணிவரை நீடித்தது.

  நேரம் ஆக ஆக கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது.

  கிட்டத்தட்ட ஆம்பூர் கலவரம் போல சூழல் ஏற்பட்டது. ஆயுதப்படை காவலர் திருமால் என்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கதறி அழுதார்.

  அதே போல் பெண் போலிசாரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஒருகும்பல் முயன்றது. அப்போது அவர்களை ஒருஇடத்தில் அடைத்துவிட்டு தனியாக வெளியே செல்லவேண்டாம் என்று உத்தரவிட்ட உயரதிகாரிகள், பின்னர் கூடுதல் போலிசாரை வரவழைத்து கலவரக்காரர்களை அப்புறப்படுத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  இது குறித்து மாவட்ட காவல் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அந்த இளைஞர் மாடு முட்டியதால் தான் இறந்தார். அது வீடியோவில் கிளியராக உள்ளது. இருந்த போதும் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்த பின்னர் எது உண்மை என்பது உறுதிபடும்.

  போலிசார்  பந்தோபஸ்த்துக்காகவே வந்திருக்கிறோம். மக்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அப்படியிருக்க போலிசாரை தாக்குவதும், காவல் துறையின் வாகனங்களை சேதப்படுத்துவதும் கலவரம் செய்வதற்கு சமமாகும். அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.