"கலைஞர் உலகத்தை" திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆன் லைன் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்ய வசதி!

உ.சசிகுமார்,
சென்னை மெரினா கடற்கரையில், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கருணாநிதியின் நினைவிடத்தையும், நினைவிட வளாகத்தில் உள்ள 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நினைவிடத்தில் கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்று வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்துக்கு உள்ளே இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், வைகோ, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மொத்தம் 8.57 ஏக்கரில் அமைந்துள்ளன. இதன் நுழைவுவாயிலை கடந்து சென்றதும், அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகளும், அண்ணா அருங்காட்சியகமும் உள்ளது.
அண்ணா சதுக்கத்தை கடந்ததும், கருணாநிதி சிலை அமைந்துள்ளது. 'ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்' என்ற வாசகத்துடன் கருணாநிதி சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழை செம்மொழி என மத்திய அரசு ஏற்றதை பாராட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா எழுதிய கடிதம் தமிழ், ஆங்கிலத்தில் புத்தக வடிவில் வைக்கப்பட்டுள்ளது.
சதுக்கத்தின் பின்புறம், வியட்நாம் மார்பிள் சுவரில் வண்ண கற்களால் கருணாநிதி முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இரவில் இந்த சுவரின் பின்னால் ஒளிரும் விளக்கு மூலம், கருணாநிதி உருவம் முழுமையாக ஒளி வெள்ளத்தில் தெரியும் வகையிலும், சுற்றிலும் பொன்னிறத்தில் நட்சத்திரங்கள் தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனை திட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
'உரிமை போராளி கலைஞர்' என்ற அறையில், சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்து, முதல்முதலாக கொடியேற்றி அவர் பேசியது, அவரது அங்க அசைவுடன் தத்ரூபமாக, நவீன தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது, கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்த நூல் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது ஆகிய வசதிகளும் உள்ளன.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படக்காட்சிகளாக காட்டும் 'அரசியல் கலை அறிஞர் கலைஞர்' எனும் சிறிய திரையரங்கம், 7டி தொழில்நுட்பத்தில் காண்பிக்கும் 'சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்' என்ற தலைப்பிலான ரயில் பெட்டி போன்ற அறை ஆகியவையும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதே போல் கருணாநிதியின் அருகில் அமர்ந்து அவரது பேச்சை கேட்கும் வகையிலும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி சதுக்கத்தின் பின்புறம், பொதுமக்கள் அமர்ந்து கடலை ரசிக்கும் வகையில் இருக்கை வசதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
இன்னும் சில வாரங்கள் கழித்து கலைஞர் உலகத்தை மக்கள் காண அனுமதிக்கப்படுவர். இங்குள்ள அருங்காட்சியகத்தில், ஒரு நேரத்தில் 200 பேர் மட்டுமே சென்று வரமுடியும் என்பதால், முஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கலைஞர் உலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் அரசியல் தலைவர்களுடன் அமர்ந்து ரசித்தார்.