கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு! எஸ்.பி.கிரண் ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி!

ம.பா.கெஜராஜ்,
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி டி.வி.கிரண் ஸ்ருதி இ.கா.ப அவர்கள் தலைமையில் "கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி" எடுக்கப்பட்டது.
இவ்வுறுதிமொழியில் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன்.
எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன்.
கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காக பணியாற்றுவேன்,
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரியதாக்குவதற்கு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீறிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வுறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு.முத்துக்கருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு) , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்
இதைப்போலவே மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் "கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி" எடுக்கப்பட்டது.