சட்டசபை வரும் மக்களுக்கு மான்யத்தில் சாப்பாடு! புதுவை முதல்வர் அதிரடி!

சட்டசபை வரும் மக்களுக்கு மான்யத்தில் சாப்பாடு! புதுவை முதல்வர் அதிரடி!

உ.சசிக்குமார்,

புதுவை சட்டசபைக்கு பல்வேறு காரணங்களுக்காக மக்கள் வருகிறார்கள். மக்களின் முதல்வர் என்கிற வகையிலும்,, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

  குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவர்களுக்கு அப்பகுதியில் மதிய உணவு கிடைக்காததால் உணவின்றி அங்கேயே காத்திருக்கின்றனர்.

 அருகில் எங்கும் ஓட்டல் வசதி இல்லை. சற்று தூரத்திலுள்ள ஓட்டல்களிலும் விலை அதிகம் என்பதால்  ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர்.

  மக்களின் அந்த பிரச்சனையை தீர்க்கின்ற வகையில் சட்டசபை வளாகத்தில் மானிய விலையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

 எனவே முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபை வளாகத்தில் உணவகம் அமைப்பதற்கு அனுமதி அளித்தார்.

  மேலும் இதனை அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி சாலையில் உள்ள சட்டசபையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் செலவில் புதிதாக உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.